பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்..
தலைப்பு : பிறை நிலவாய் அவள் முகம்
பிறை நிலவாய் அவள் முகம்
என்னவளின் மதி முகம்!
ஊடலில் தேய்ந்து மறைவதும் பின்
கூடலில் தோய்ந்து மலர்வதுமாய்!!
நாணத்தில் கிறங்கி கரைவதும் பின்
காதலில் திளைத்து துளிர்வதுமாய்!!
என்றென்றும் என் இதயகமலத்தில்
பிறை நிலவாய் அவள் முகமே!!
எனினும் ஓர் ஐயம் விடாமல் வதைக்குதடி எனையும் சிதைக்குதடி!
என்னவள் உன் கரமணிந்த
கண்ணாடி வளையல்
உடைந்துதான் சிதறியதோ?
சிதறியதில் ஒரு துண்டு
அது பிறையெனவே மின்னுதோ??
என்னவள் உன் காலணிந்த வெள்ளி கொலுசுதான் தொலைந்ததுவோ
தொலைந்ததில் ஒன்று
அது வெள்ளி பிறையெனவே மின்னுதோ?
என்னவள் உன் நகம் வெட்டி விட்டெறிய வெட்டியதில் ஒரு துணுக்கு
விண்ணில் தான் பாய்ந்ததுவோ
அது பிறையெனவே மின்னுதோ?
என்னவள் உன் இதழ் தொட்ட
அன்னத்தின் பருக்கை ஒன்று
தவறித்தான் விழுந்ததுவோ
அது பிறையெனவே மின்னுதோ?
இல்லை இல்லை இவையாவும் அல்ல தெரிந்து கொண்டேன் தெளிவுபெற்றேன்!!
என்னவள் உன் ஒற்றை நரைமுடி
நீயறியாமல் நான் பிய்த்தெறிய
காற்றில் மிதந்து…
மேகப் படகேறி…
ஆகாயம் அடைந்து…
அண்டத்தில் நீந்துதடி!
அது பிறைநிலவாய் பட்டொளி வீசுதடி!!
மூன்றாம் பிறையதனை ஆயிரம்
முறை கண்டவர்க்கு
முற்பிறவி பாவம் போகுமாம் !
முக்கண்ணனும் பணியாளாம்!!
என் பிறைநிலவுன்னை ஒரு முறை
என் விழி கண்டால்
என்னாளும் திருநாளாம்!
என் வாழ்நாள் யாவும் பெருநாளாம்!!
@Arun @Kamu pillai Sis
0 Comments