பெயர் : ஜெயந்தி. G.D.
தலைப்பு : என்னை சுமக்கும் காலணியே
முதலிடம்
பாதம் காக்கும் பாதுகையே
பா ஒன்று வடித்தேன் உனக்காக!
பாதை யாவிலும் நீ துணையிருக்க
பாதுகாப்பாய் நானும் நடந்தேனே!!
கருவில் அன்னை சில மாதம்…
தோளில் தந்தை பல மாதம்…
தோலால் தைத்த தோழனே நீயோ
எனையும் சுமந்தாய் உன் ஆயுட்காலம்!!
நீ வதைந்து எனை காத்தாய்!
நீ சிதைந்து எனை செதுக்கினாய்!
நீ தேய்ந்து எனை உயர்த்தினாய்!
நீ இளைத்து எனையும் இழைத்தாய்!!
உன் மேனி எங்கும் பிறரின் எச்சம்
உன் உறுதுணையால் அடைவேனே உச்சம்!
உன் தேகம் சாக்கடை சேற்றில் நனைந்தாலும்
கால்விடவில்லை நீ எனை ஒருநாளும்!!
கோவில் வாயிலில் அரண் உனைவிட்டு
உட்புகுந்து நான் தொழும் போதும்
நீ களவு போகாமல் இருக்கவே பிரார்த்தித்திருப்பேன் பல நேரம்!!
நீ வாசலில் வீற்றிருக்கும் விதம் வைத்து
என் அன்னை அறிவாள் என் மனப்பாங்கு!
ஒழுங்காய் ஓரமாய் நீ இருந்தால் அமைதி் என்றே தெரிந்தடுவாள்!
சிதறி இருபுறமாய் நீ கிடந்தால்
புயலொன்றிற்கு தயார் ஆவாள்!!
இராமன் சப்பாத்து அரியணை ஏற
பரதன் ஆண்ட வரலாறு!
அழகிய காலணி நயமாய் பொருந்த
சின்ட்ரெல்லா இளவரசி ஆன கதை!
தெரிந்தும் அடிமையாய் நீ கிடந்தாய் ஆண்டான் காலணி தலையில் சுமந்து!
போராடிப் பெற்ற உரிமையடா காலணி அணிவதும் உன் பெருமையடா!!
@Iyarkaiyin kaarigai💙 @Kamu pillai Sis
0 Comments